
சென்னை:
அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தைக் கையில் எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக ஐ.டி விங்கை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டி உள்ளார். இந்தத் திடீர் இணக்கம், அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 23 ஆம் தேதி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவி பாலியல் வன்கொடுமை:
பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த எஃப்.ஐ.ஆரில் மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன் சார், சார் என்று கூறி ஒருவரிடம் போனில் பேசியதாகப் பாதிக்கப்பட்ட மாணவி கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. யார் அந்தச் சார்? பெரிய புள்ளி யாரும் சம்பந்தப்பட்டுள்ளனரா எனக் கேள்வி எழுந்தது.
ஆனால், அந்த மாணவியை மிரட்டுவதற்காக ஞானசேகரன் வேண்டுமென்றே அவ்வாறு பேசியுள்ளார் என்றும், அந்தச் சமயத்தில் ஞானசேகரனின் செல்போன் ஏரோபிளேன் மோடில் இருந்தது என்றும், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்திருந்தார். ஆனால், அந்த “சார்” குறித்த சந்தேகத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றன.
யார் அந்தச் சார்?
அந்தச் சார் யார்? என்பது குறித்து சரியான தகவலைப் போலீசார் தெரிவிக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ‘யார் அந்தச் சார்?’ என்ற கேள்வியுடன் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுக ஐ.டி விங் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், “அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் யார் அந்தச் சார் ? #SaveOurDaughters” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
எக்ஸ்பிரஸ் அவென்யூ மால்:
இந்நிலையில், இன்று சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அதிமுகவினர் ஏராளமானோர் திடீரெனக் குவிந்தனர். அதிமுக ஐ.டி விங்கை சேர்ந்தவர்கள் மாலின் உள்ளே நுழைந்து, தங்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி போராட்டம் நடத்தினர். அவர்களது கைகளில் வைத்த பதாகைகளில் “யார் அந்தச் சார்?” என்ற வாசகம் இடம் பெற்று உள்ளது.
மேலும், அதிமுக ஐடி விங் அணியினர், எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் இருந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களிடம், இது தொடர்பாக எடுத்துரைத்து, தமிழக அரசுக்கு எதிராகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
அண்ணாமலை பாராட்டு:
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “யார் அந்தச் சார்?” என்ற பதாகையுடன் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நூதன போராட்டத்தில் குதித்த அதிமுகவை பாராட்டி உள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சாமானிய மக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளில் தலையிடாமல் அரசியலில் ஒருபோதும் இருக்க முடியாது. இந்தப் பிரச்சனையை எடுத்துக்கொண்டு ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டதற்கு பாராட்டுகள்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.
முன்னதாக அண்ணாமலை, மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, கோவையில் உள்ள தனது வீட்டின் முன்பு தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். மேலும் திமுகவை ஆட்சியை விட்டு வெளியேற்றும் வரை செருப்பு அணியபோவதில்லை என்றும் அறிவித்தார்.
அதிமுக – பாஜக இணக்கம்:
இந்தச் சூழலில், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் அதிமுக ஐடி விங் சார்பில் நடத்தப்பட்ட நூதன போராட்டத்திற்கு அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணி முறிவு ஏற்பட்டது முதலே, பாஜக – அதிமுக இரு கட் சியினருமே மாற்றி மாற்றிக் கடுமையாக விமர்சித்துக் கொள்வதைத்தான் பார்த்து வருகிறோம். அதிலும் குறிப்பாக இரு கட்சியின் ஐ.டி விங் சமூக வலைதளங்களில் கடுமையாக மோதிக் கொண்டு வந்தது. இந்நிலையில், திடீரென அதிமுக ஐ.டி விங்கின் செயல்பாடுகளை அண்ணாமலை பாராட்டி இருப்பது புருவங்களை உயரச் செய்துள்ளது.



