
அண்ணாமலை தமிழகம் திரும்ப உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆக்ஸ்போர்டு பல்கலையில் மூன்று மாத அரசியல் புத்தாய்வு படிப்பில் சேர்ந்து படிக்க, கட்சித் தலைமை அனுமதியுடன் ஆகஸ்ட் மாதம் 27ல் லண்டன் சென்றார். சுமார் 4 மாதங்கள் லண்டனில் தங்கி படிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.
எனவே தமிழக பாஜக தலைவராக வேறொருவர் நியமிக்கப்பட இருப்பதாகத் தகவலை வெளியானது. ஆனால் அண்ணாமலை மீது தேசிய தலைமை வைத்த நம்பிக்கை காரணமாக அண்ணாமலையை மாற்ற எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதே நேரத்தில் தமிழகத்தில் பாஜக பொறுப்புக் குழு நியமிக்கப்பட்டது. பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தலைமையில் அந்தக் குழுவானது செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அண்ணாமலையின் வெளிநாடு பயணத்தின் காரணமாகத் தமிழக அரசியல் அமைதியாகக் காணப்படுகிறது.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில், மீண்டும் அரசியல் புத்தாய்வு படிப்புக்கான சான்றிதழ் பெறச் செல்வார்.இதனிடையே, தமிழக பா.ஜ., வில் பல மாவட்ட நிர்வாகிகளை அண்ணாமலை மாற்றியமைக்க உள்ளார்.
பாதிக்கும் மேற்பட்ட இடங்களில், இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கிப் புதுப்பொலிவூட்ட உள்ளார். கட்சியின் தலைமை அவருக்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளதால், அவரது நடவடிக்கையில் வேகம் இருக்கும் என்கின்றனர் கட்சி நிர்வாகிகள்.


