முந்தைய தேர்தலில் திமுக அளித்த 505 உறுதிமொழிகளில் 66 உறுதிமொழிகளை மட்டும்தான் நிறைவேற்றி உள்ளதாகவும், ஆனால் நூறு விழுக்காடு நிறைவேற்றி விட்டதாக ஸ்டாலின் பச்சைப் பொய் சொல்வதாகவும் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் வெள்ளாளப்பட்டி ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சமுதாயக்கூடம் கட்டுவதற்கு அன்புமணி 80 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். அதனுடன் ஒன்றியப் பொது நிதி, ஒன்றிய கவுன்சிலர் நிதி ஆகியன சேர்த்து ஒரு கோடியே 14 இலட்ச ரூபாய் மதிப்பில், திருமண மண்டபம், உணவருந்தும் கூடம், சுகாதார வளாகம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டது. அதனை அன்புமணி திறந்து வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, 2021ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய 505 உறுதிமொழிகளில் 66 உறுதிமொழிகளை மட்டும்தான் நிறைவேற்றி இருப்பதாகக் கூறினார்.
13 விழுக்காடு உறுதிமொழிகளை மட்டுமே நிறைவேற்றிவிட்டுச் சட்டமன்றத்திலே பேசும்போது 100 விழுக்காடு நிறைவேற்றி விட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் பச்சைப் பொய் சொல்வதாக அன்புமணி குற்றஞ்சாட்டினார்.

