
அனந்த்நாக் மாவட்டத்தில் 4வது நாளாகப் பயங்கரவாதிகளின் மீது பாதுகாப்புப் படை தாக்குதல்…
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள காடுகளில் பயங்கரவாதிகளின் மறைவிடங்களைக் குறிவைத்து பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்திவருகிறது. இந்த அனந்த்நாக் என்கவுன்டர் எனப்படும் இந்த ராணுவ நடவடிக்கை இன்று 4வது நாளாக நடைபெறுகிறது.
இந்தத் தாக்குதலின்போது அவ்வப்போது பயங்கர வெடிச்சத்தங்களும் அப்பகுதியில் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதிகளின் இருப்பிடத்தைக் கண்டறிய ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. பயங்கரவாதிகளில் ஒருவர் மறைவிடத்தைவிட்டு தப்பி ஓடும் காட்சி ட்ரோன் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்னல் மன்பிரீத் சிங், மேஜர் ஆஷிஷ் தோஞ்சக், ஜம்மு காஷ்மீர் துணைக் கண்காணிப்பாளர் ஹுமாயுன் பட் மற்றும் ஒரு பாதுகாப்புப்படை வீரர் ஆகியோர் சென்ற புதன்கிழமை காலைச் சண்டையில் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, அனந்த்நாக்கில் உள்ள கோக்கர்நாக் வனப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து, பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பயங்கரவாதிகள் ஒழிக்கப்படுவார்கள் என்று காஷ்மீர் காவல்துறை உறுதியளித்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள பயங்கரவாதிகளைத் தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. காஷ்மீர் கூடுதல் காவல்துறை இயக்குநர் விஜய் குமார், நேற்று (வெள்ளிக்கிழமை) ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் இரண்டு அல்லது மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறியிருக்கிறார். ஓய்வுபெற்ற காவல்துறை மற்றும் ராணுவ அதிகாரிகள் ஊடகங்களில் தங்கள் யூகக் கருத்துகளைப் வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.

