
இந்தியாவில் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் பயங்கரவாதிகள் உலகின் எந்தப் பகுதிக்கு ஓடி ஒளிந்தாலும் நமது இராணுவம் அவர்களைத் தேடிச் சென்று வேட்டையாடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தேசியப் பாதுகாப்புப் படையின் 41ஆவது நிறுவன நாளையொட்டி அரியானாவின் மானேசரில் நடைபெற்ற விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது, மோடியின் ஆட்சியில் பயங்கரவாதத்தை எந்த வகையிலும் சகித்துக்கொள்வதில்லை என்ற கொள்கையைப் பின்பற்றி வருவதாகத் தெரிவித்தார்.
இதற்காகப் பயங்கரவாத நடவடிக்கைத் தடுப்புச் சட்டம், தேசியப் புலனாய்வு முகமைச் சட்டம் ஆகியவற்றை இயற்றியுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தியாவில் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் பயங்கரவாதிகள் உலகின் எந்தப் பகுதியில் ஒளிந்திருந்தாலும் அவர்களைத் தேடிச் சென்று வேட்டையாடுவோம் என்பதை நமது இராணுவ நடவடிக்கைகள் மூலம் மெய்ப்பித்துள்ளதாக அமித் ஷா குறிப்பிட்டார்.



