Akbar – Sita Lion Name Case: சிங்கங்களுக்கு வேறு பெயர் வைக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Advertisements

சீதா, அக்பர் சிங்கங்களுக்கு வேறு பெயர் வைக்கக் கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவிலிருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு பிப்ரவரி 12ஆம் தேதி 2 சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன. அதில், 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும், 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

ஆனால், சீதா, அக்பர் என்ற பெயர்களைக் கொண்ட சிங்கங்களை ஒரே இடத்தில் அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. அதில், “அக்பர் என்பவர் புகழ்பெற்ற முகலாய பேரரசர்களில் ஒருவர். சீதா என்பவர் ராமாயணத்தின் கதாபாத்திரம். இந்து மத வழக்கங்களில் சீதை தெய்வமாக வழிபடப்படுகிறார். எனவே, இது இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளது.” எனக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும், சிங்கங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கானது கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, “பாசத்தின் அடிப்படையில் சிங்கங்களுக்கு இப்படி பெயர் சூட்டலாம். அதனை எப்படி நீங்கள் அவதூறு என நினைக்கலாம். இது ஒவ்வொருவரின் மனநிலையை பொறுத்து மாறுபடும். சிங்கத்துக்குச் சீதா எனப் பெயர் வைப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது.” என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அதற்கு, “இன்று சிங்கத்துக்கு இப்படி பெயர் வைத்தவர்கள் நாளைக் கழுதைக்கு ஏதாவது தெய்வத்தின் பெயரை வைக்கலாம். இதனைத் தடுக்க வேண்டும். மேலும் நாங்கள் சீதாவை வணங்குகிறோம். அவர் கோவிலில் தான் இருக்க வேண்டும். காட்டில் அல்ல.” என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் வழக்கறிஞர் பதிலளித்தார்.

தொடர்ந்து, இந்து தெய்வமான துர்கா தேவியின் காலடியில் சிங்கம் உள்ளது. துர்கா பூஜையின்போது சிங்கம் இடம்பெறுகிறது. இந்தச் சிங்கமும் அனைவராலும் வணங்கப்படுகிறதே? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு, “சிங்கம் துர்கா தேவியின் காலடியில் இருப்பது உண்மை தான். அது தீயவர்களை விரட்டித் தீமையைத் தடுப்பதற்காகத் தான். மேலும் சிங்கத்துக்குப் பெயர் வைத்து வழிபடுவதில்லை. சிங்கத்தை வணங்கும் வகையில் பூஜைகளில் எந்த மந்திரங்களும் உச்சரிக்கப்படுவதில்லை.” என விஎச்பி வழக்கறிஞர் பதிலளித்தார்.

இந்த மனுவைப் பொதுநல மனுவாகத் தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிமன்றம், அரசிடம் இருந்தும் விளக்கம் கோரியிருந்தது. மேலும், வழக்கு விசாரணையானது இன்றைய தினத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி, அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், சீதா, அக்பர் சிங்களுக்கு வேறு பெயர் வைக்க உத்தரவிட்டுள்ளது.

இந்து, கிறிஸ்தவர், மத போராளிகள் மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயர்களை இனி விலங்குகளுக்கு வைக்க வேண்டாமென அறிவுறுத்திய நீதிமன்றம், சீதா, அக்பர் பெயர் சர்ச்சையைத் தவிர்க்கச் சிங்களுக்கு வேறு பெயரை மாற்றுங்கள் என உத்தரவிட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *