
ஆதித்யா-எல் 1 விண்கலத்தின் செயல்பாடு நன்றாக உள்ளது என்று இஸ்ரோ அறிவித்து உள்ளது.
பெங்களூரு, Adithya L1 ISRO ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட் மூலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல் 1 என்ற விண்கலம், கடந்த மாதம் 2-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
பூமியிலிருந்து 125 நாட்கள் பயணம் செய்து விண்கலம் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ சென்றடையும். அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் விண்கலம் ஈடுபடும். விண்கலம் பூமியைச் சுற்றி வரும்போது 5 முறை சுற்றுப்பாதையின் அளவு உயர்த்தப்பட்டது. விண்கலம் தற்போது பூமியின் ஈர்ப்பு மண்டலத்திலிருந்து விலகி வெற்றிகரமாக ‘லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், ஆதித்யா-எல் 1 விண்கலத்தின் செயல்பாடு நன்றாக உள்ளது என்று இஸ்ரோ அறிவித்து உள்ளது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தளத்தில்,”ஆதித்யா விண்கலத்தை ஹாலோ சுற்றுப்பாதை நோக்கிச் செலுத்துவதற்கான பணிகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. ஹாலோ பாதைக்கு விண்கலத்தை மாற்றம் செய்வதற்கான பணிகள் கடந்த 6ல் 16 விநாடிகள் வெற்றிகரமாக நடந்தன. ஆதித்யா-எல் 1 விண்கலத்தின் செயல்பாடு நன்றாகவும் சரியான பாதையிலும் சென்று கொண்டிருக்கிறது. சூரியனின் எல் 1 புள்ளியை நோக்கி ஆதித்யா எல் 1 விண்கலம் திட்டமிட்டப்படி பயணிக்கிறது. ஆதித்யா-எல்1 தொடர்ந்து முன்னோக்கி நகர்வதால், காந்த புலமையை அளவிடும் கருவி சில நாட்களுக்குள் மீண்டும் இயக்கப்படும்” என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.



