
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பட்ட வேதனைகள் பேசி தீராது என அவரது நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் காலமானார். அவரது மறைவுச் செய்தி இன்னும் பலரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள விஜயகாந்த் நினைவிடத்துக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருவேதே அவர் எப்பேர்ப்பட்ட வாழ்க்கை வாழ்ந்துள்ளார் என்பதற்கு சாட்சி.
இப்படியான நிலையில் விஜயகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய சினிமா பிரபலங்கள் விஜயகாந்த் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
அந்த வகையில் நடிகர் ராஜ்கிரண் பேசும்போது, “என் தம்பி விஜயகாந்த் ஒரு வெள்ளந்தியான மனிதர். அவருக்கு சூழ்ச்சிகள் தெரியாது. விஜயகாந்த் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் இன்னும் நெடுங்காலம் வாழ்ந்திருப்பார். அரசியல் தான் அவரை காவு வாங்கி விட்டது. விஜயகாந்த் நோய்வாய்ப்பட்ட காலம் முதல் இறக்கும் வரை எவ்வளவு கஷ்டங்கள் அனுபவித்து இருப்பார் என்பதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது. அந்த வேதனைகள் பேசி தீராது. அந்த நல்ல மனம் இறைவன் நிழலில் சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.

