A Ukrainian Drone Attack: 4 எண்ணெய் கிடங்குகள் தீப்பற்றி எரிவதால் பதற்றம்!

உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் பயங்கர தாக்குதலை நடத்தி உள்ளன. இதில் 4 எண்ணெய் கிடங்குகளும் தீப்பற்றி எரிவதால் அந்த நகரத்தையே கரும்புகை சூழ்ந்துள்ளது.

நேட்டோ கூட்டமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. 2 ஆண்டுகள் கடந்தும் போர் முடிவுக்கு வரவில்லை. போரில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பதும் நீடிக்கிறது. இந்த போரில் நேட்டோ அமைப்பில் உள்ள அமெரிக்கா, போலந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு பொருளாதார, ஆயுத உதவிகளை அளித்து வருகின்றன. போரின் தொடக்கத்தில் அடி வாங்கிய உக்ரைன் பின்னர் அவ்வப்போது ரஷ்யாவுக்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.

2024ம் ஆண்டு தொடக்கத்தில் மக்களிடையே உரையாற்றிய உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, “இந்த ஆண்டு ரஷ்யா மீது அதிக தாக்குதல்கள் நடத்தப்படும்” என்று தெரிவித்திருந்தார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக ரஷ்யாவிலுள்ள எண்ணெய் கிடங்குகள் மீது உக்ரைன் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் கிளிண்ட்சி நகரில் 70,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இங்கு ரஷ்யாவுக்கு சொந்தமான 6,000 கனமீட்டர் கொள்ளளவு கொண்ட 4 மிகப்பெரிய எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இதன் மீது உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் பயங்கர தாக்குதலை நடத்தி உள்ளன. உக்ரைனின் ஆளில்லா விமானங்களை ரஷ்ய வான்பாதுகாப்பு படை தடுத்து சுட்டபோதும், அதிலிருந்த குண்டுகள் கிடங்குகள் மீது விழுந்து வெடித்து சிதறியது. இதில் 4 எண்ணெய் கிடங்குகளும் தீப்பற்றி எரிவதால் அந்த நகரத்தையே கரும்புகை சூழ்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *