
கிராம மக்கள் தவிப்பு!
கொசஸ்தலை ஆற்றில் அமைக்கப்பட்ட தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் அதனை சுற்றி உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஏரி,குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. குறிப்பாக திருத்தணி தாலுகாவில் உள்ள பெரும்பாலான ஏரிகள் முழுகொள்ளவை எட்டி உள்ளன.

பலத்த மழை காரணமாக தற்போது கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பாய்கிறது. மேலும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே பாயும் பாலாறு திருவாலங்காடு அருகே கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக திருவாலங்காடு அடுத்த குப்பம் கண்டிகை, எல்.வி.புரம் ஆகிய பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் அமைக்கப்பட்ட தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.
இதனால் சுற்றி உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தவிப்பில் உள்ளனர். அவர்கள் திருவள்ளூர், சென்னை, உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


