
கேரளாவை சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன் மீது மேலும் இரு பெண்கள் பாலியல் புகாரளித்துள்ளனர். பெண் மருத்துவர் அளித்த பாலியல் புகாரில் வேடன் தலைமறைவாக உள்ள நிலையில் மேலும் 2 பெண்கள் புகாரளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இப்படியான சூழலில் வேடன் மீது கடந்த மாதம் இளம்பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். அதில் கடந்த 2021 முதல் 2023 இடைப்பட்ட காலத்தில் தன்னுடன் நட்பில் இருந்த வேடன், தன்னை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி பல முறை பாலியல் உறவு கொண்டதாக இளம் பெண் மருத்துவர் புகாரளித்துள்ளார். இதனடிப்படையில் எர்ணாக்குளத்தில் உள்ள தீர்க்ககரா காவல் நிலையத்தினர் பி.என்.எஸ் சட்டப்பிரிவு 376-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தற்போது தலைமறைவாக உள்ள வேடனை போலீஸ் தேடி வரும் நிலையில் அவர் மீது மேலும் இரண்டு பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் இந்த புகாரை அளித்துள்ளனர். புகார் கொடுத்த இரண்டு பெண்களும் பி.ஹெச்டி படித்து வருபவர்கள். இதில் ஒரு பெண் 2020ல் ஆதிவாசி மக்கள் தொடர்பாக உதவி கேட்டபோது வேடன் உடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அப்போது எர்ணாகுளம் குடியிருப்புக்கு தன்னை வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ய வேடன் முயற்சித்ததாக புகார் கொடுத்திருக்கிறார்.
முதல் சந்திப்பிலேயே தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய வேடன் முயற்சித்தார் என்று அந்தப் பெண் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.மற்றொரு பெண் கொடுத்த புகாரில், சங்கீத கலைஞரான தன்னை தேடி வந்து வேடன் பழக்கம் ஏற்படுத்தியதாகவும் தொடர்ந்து தன்னை 2021ல் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இரண்டு புகார்களையும் கேரள முதல்வர் அலுவலகம் மாநில காவல்துறைக்கு அனுப்பியிருக்கிறது. இந்தப் புகார் தொடர்பாக விரைவில் விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது.


