“ஆல் இஸ் வெல்…” – கே.எல்.ராகுலுக்கு விருந்து வைத்த லக்னோ அணி உரிமையாளர்!

Advertisements

லக்னோ: லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல்.ராகுலிடம் மிகவும் கோபமாகப் பேசிய காட்சிகள் வெளியாகிச் சர்ச்சையான நிலையில், கே.எல்.ராகுலை தனது வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்துள்ளார் சஞ்சீவ் கோயங்கா.

நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்விக்குப் பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல்.ராகுலிடம் தனது விரக்தியை ஆவேசத்துடன் வெளிப்படுத்தி இருந்தார். அது சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் மத்தியில் பரவலாகக் கவனம் பெற்றது.

கே.எல்.ராகுலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் ஒலித்தன. இதில் ஆதரவு குரலே அதிகம். ‘கேமரா கண்களுக்கு அப்பால் அதைச் செய்திருக்கலாம்’ என்பதை பெரும்பாலான பதிவுகள் எதிரொலித்தன. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலரும் ராகுலுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பலதரப்பிலிருந்தும் சஞ்சீவ் கோயங்காவுக்கு விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன.

இந்தச் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகச் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல். ராகுலை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து வைத்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது கே.எல். ராகுல் மற்றும் சஞ்சீவ் கோயங்கா இருவரும் கட்டியணைத்து பரஸ்பரம் தெரிவித்தனர். இந்தப் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதன்மூலம் லக்னோ அணியில் இருந்துவந்த புகைச்சல் முடிவுக்கு வந்தது.

முன்னதாக, லக்னோ பயிற்சியாளர் லான்ஸ் க்ளூஸ்னர் பேசுகையில், “சஞ்சீவ் கோயங்காவுக்கும் கே.எல். ராகுலுக்கும் இடையிலான உரையாடல் கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு இடையேயான உணர்ச்சிபூர்வமான பரிமாற்றம் மட்டுமே. வேறு எந்தப் பிரச்சனையும் இல்லை. இது போன்ற விவாதங்கள் சாதாரணமானவை. இந்த விவாதங்களே அணியை மேம்படுத்த உதவும்” என்று தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *