Y. S. Sharmila: ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு தலைவர் பதவி?

Advertisements

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகத் தற்போதைய ஆந்திர முதலமைச்சரின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மக்களவை தேர்தலுடன், இந்தாண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்கு முன், ஆந்திர மாநில காங்கிரசில் மாற்றங்கள் துவங்கியுள்ளன. இந்த மாற்றங்கள் காரணமாக, ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டி (APCC) தலைவர் பதவியிலிருந்து கிடுகு ருத்ர ராஜு ராஜினாமா செய்துள்ளார். இதன் பிறகு இந்தப் பதவிக்குச் சமீபத்தில் டெல்லியில் காங்கிரஸில் இணைந்த ஒய்.எஸ். ஷர்மிளா நியமனம் செய்யப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கிடுகு ருத்ர ராஜு தனது ராஜினாமா கடிதத்தைக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடந்த வாரமே அனுப்பியுள்ளார். இதையடுத்து, ஒய்.எஸ். ஷர்மிளா காங்கிரஸில் இணைந்ததையடுத்து, அக்கட்சி அவரிடம் மாநில பொறுப்பை ஒப்படைக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஷர்மிளா காங்கிரஸில் சேர்ந்த பிறகுதான், ருத்ர ராஜு அவரைக் காங்கிரஸுக்கு வரவேற்று, அவருக்காகத் தானாக ராஜினாமா செய்ய முன்வந்தார் என்று கூறப்படுகிறது.  ஷர்மிளா ஆந்திர முதல்வர் ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. தனது ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியை (ஒய்எஸ்ஆர்டிபி) ஷர்மிளா ஜனவரி 4 ஆம் தேதி காங்கிரஸுடன் இணைத்தார்.

ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய் ராஜசேகர ரெட்டியின் மகளான ஷர்மிளா, தனது சகோதரர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் ஏற்பட்ட காரணத்திற்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.

தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலின்போது, கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான, ”பி.ஆர்.எஸ்-ன் ஊழல் மற்றும் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக” காங்கிரஸுக்கு ஆதரவளிப்பதாக ஷர்மிளா அறிவித்திருந்தார்.

ஒய்.எஸ். ஷர்மிளா காங்கிரஸில் இணைந்த பிறகு, ஆந்திராவில் அவரது சகோதரர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அரசியல் பின்னடைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதே நேரத்தில், ஷர்மிளாவும் கடந்த 2021 வரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் ஒரு ஆளுமையாக இருந்தார். 2012ல் ஜெகன் நீண்ட காலம் சிறையில் இருந்தபோது, ஒய்எஸ்ஆர்சி தலைவராகச் சர்மிளா பொறுப்பேற்று கட்சியை வழிநடத்தினார். கடந்த 2019 ஆந்திர பிரதேச சட்டசபை தேர்தலில் ஷர்மிளா தனது சகோதரர் ஜெகன்மோகன் ரெட்டிக்காகப் பிரச்சாரம் செய்தார்.

2019 தேர்தலில் அபார பெரும்பான்மையுடன் ஜெகன்மோகன் வெற்றி பெற்றபோது, தனக்கு எந்தப் பதவியும் வழங்கப்படாததால் ஷர்மிளா கடும் அதிருப்தியில் இருந்தார். அதில் இருந்தே இருவருக்கும் புகைச்சல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாகவும், அரசியல் கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், ஊடகங்களில் செய்திகள் வெளிவரத் தொடங்கின. இதை உண்மையென நிரூபிக்கும் வகையில், இருவரும் சமூக வலைதளங்களில் பண்டிகை நாட்களில் வாழ்த்துவது கூட இல்லாமல் போனது.

ஆனால் தற்போதைய நிலவரத்தைப் பார்க்கும்போது இவர்கள் ஒரு குடும்பமாக இணைந்திருந்தாலும், அரசியல் ரீதியாகப் போட்டியாளர்களாகவே இருக்க போகிறார்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *