
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு அதிரடி காட்டி வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளாத நாடுகளுக்குப் புதிய வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவிற்கும் 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 25% வரியுடன், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி கூடுதலாக 25% வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி நடவடிக்கையால், இந்தியாவின் ஜவுளி, காலணிகள், தோல், ரசாயனங்கள், நகைகள், ஜெம் கற்கள், மின்னணுப் பொருட்கள், கடல்சார்ந்த உணவுப் பொருட்களின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், ட்ரம்ப் அரசின் இது போன்ற வரி நெருக்கடிகளுக்கு அடி பணியாமல், அதை எதிர்கொள்வதற்கான வலிமையை இந்தியா அதிகரித்துக்கொள்ளும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அதேநேரத்தில், ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. “ரஷ்யாவிடமிருந்து அதிக எண்ணெய் வாங்கும் சீனா மற்றும் இதர நாடுகளுக்கு அதிக வரி விதிப்பதை விட்டுவிட்டு, ட்ரம்ப் இந்தியாவுக்கு அதிக வரி விதித்திருக்கிறார்.
இதன்மூலம் அமெரிக்கர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். அமெரிக்க – இந்திய உறவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படும். உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கவே இந்த நடவடிக்கை. இது உக்ரைன் போருக்கானது மட்டுமல்ல, பின்னணியில் வேறு ஏதோ இருக்கிறது. இந்த விவகாரம் உக்ரைன் பற்றியதுபோல இல்லை. அதிபர் ட்ரம்ப் ஈகோ காரணமாக இப்படிச் செயல்படுகிறார், அவரின் செயல் தவறானது” என அவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.



