
சேலம்:
தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து கடந்த ஆண்டில் மேட்டூர் அணை 3 முறை நிரம்பியது.
இந்த நிலையில் மழை நின்றதால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து விட்டது. அதே நேரம் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாகக் கடந்த 31-ந் தேதி 120 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 116.65 அடியாகக் குறைந்தது. அணைக்கு வினாடிக்கு வெறும் 694 கனஅடி தண்ணீரே வந்து கொண்டு இருந்தது.
அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 88.22 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.



