
வாக்குத் திருட்டைக் கண்டித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே இந்தியா கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் மக்களவைத் தேர்தலிலும், மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களிலும் பாஜகவுக்கு ஆதரவாகத் தேர்தல் ஆணையம் செயல்படுவதாகக் காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் குற்றஞ்சாட்டி வருகின்றன.
வாக்காளர் பட்டியலில் இருந்து உண்மையான வாக்காளர்களின் பெயர்களை நீக்குதல், புதிதாகப் போலியான பெயர்களைச் சேர்த்தல் என்னும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதைப் பரப்புரை செய்யும் வகையில் பீகார் மாநிலத்தின் சசாரத்தில் வாக்காளர் அதிகாரப் பயணம் என்னும் பயணத்தை ராகுல்காந்தி, லாலு பிரசாத் ஆகியோர் நேற்றுத் தொடக்கி வைத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் உறுப்பினர்கள் வாக்குத் திருட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பீகாரில் வாக்காளர் அதிகாரப் பயணம் மேற்கொண்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியும், ராஷ்டிரிய ஜனதாதளத் தலைவர் தேஜஸ்வி யாதவும் அவுரங்காபாத்தில் உள்ள சூரியக் கோவிலில் வழிபாடு மேற்கொண்டனர்.
அவுரங்காபாத்தில் ராகுல்காந்திக்கும் தேஜஸ்வி யாதவுக்கும் காங்கிரஸ் கட்சியினரும், ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியினரும் வரவேற்பு அளித்தனர்.


