
சாலை வசதி செய்து தரக் கோரி கிராமமக்கள் சேரும் -சகதியுமான சாலையில் நாற்று நட்டுமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி: திருபுவனை அருகே உள்ள தமிழகப் பகுதியான பெரிய பாபு சமுத்திரம் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இவர்கள் வசிக்கும் பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. தற்போது மழை பெய்து வருவதால் அங்கு சேரும் சகதியுமாக உள்ளது.
இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்வோர் அனைவரும் இந்த சேரும் சகதியுமான பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும். ஏற்கனவே தங்கள் பகுதிக்கு சாலை வசதி செய்து தரக் கோரி அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சேரும் -சகதியுமான சாலையில் நாற்று நட்டு சாலை வசதி செய்து தரக்கோரி கண்டமங்கலத்தில் இருந்து செல்லிப்பட்டு செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் பகுதிக்கு உடனடியாக சாலை வசதி செய்து தர வேண்டும் என்று அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


