
திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ள ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் வைகுண்ட ஏகாதசி விழாவினை முன்னிட்டு அங்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அவ்வழியாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த சிறப்பு தரிசனத்துக்காக பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் விற்கப்பட்ட நிலையில் கடந்த 23-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு 4 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் 9 இடங்களில் பக்தர்கள் நேரிடையாக சுவாமியை தரிசனம் செய்தனர்.
வழக்கம் போல் பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச தரிசன டிக்கெட்டும் கொடுக்கப்பட்டது. இந்த டிக்கெட்டை பெறுவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் போட்டி போட்டனர். இதுவரை கூடுதலாக 4 லட்சம் இலவச தரிசன டிக்கெட்டும் கொடுத்து முடிக்கப்பட்டது.
இதனால் இலவச தரிசனம் டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட்டன. ஆனால் ரூ 300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் வைத்திருப்பவர்கள் பக்தர்கள் மட்டும் திருப்பதி மலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
திருப்பதி மலைக்கு செல்லும் பக்தர்கள் பஸ்சில் ஏறும்போது தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டும் பஸ்சில் அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற பக்தர்கள் பஸ்சில் இருந்து கீழே இறக்கி விடப்படுகின்றனர். இதேபோல் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் பக்தர்கள் அலிபிரி சோதனை சாவடியில் டிக்கெட் உள்ளதா என பரிசோதித்து திருப்பதி மலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற பக்தர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
இதனால் பக்தர்களின் அசௌகரியத்தை தவிர்க்க வருகிற ஜனவரி 1-ந் தேதி வரை தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருப்பதிக்கு வர வேண்டாம் என தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது. இது குறித்த தகவல் தெரியாமல் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசன டிக்கெட் இல்லாமல் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில் வைகுண்ட வாசல் தரிசன டிக்கெட்டுகளை பக்தர்களுக்கு தேவஸ்தானம் தினமும் விநியோகித்து இருக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக விநியோகம் செய்ததால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
விவரம் தெரியாமல் வந்த பக்தர்களுக்கு தேவஸ் தானம் வேறு ஏதேனும் மாற்று ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று தெரிவித்தார்கள். மேலும் நேற்று மட்டும் திருப்பதியில் நேற்று 63, 519 பேர் தரிசனம் செய்தனர். 26,424 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


