Valmiki scam:கர்நாடக சட்டசபை வளாகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் போராட்டம்!

Advertisements

பெங்களூரு:கர்நாடக மாநிலத்தில் ரூ.187 கோடி வால்மிகி மோசடி தொடர்பாக மாநில சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே இந்த மோசடி வழக்கில் கர்நாடக முதல்-மந்திரி பெயரை வாக்குமூலத்தில் அளிக்குமாறு மாநில சமூக நலத்துறை உதவி இயக்குநரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதாக அவர் புகார் அளித்து இருந்தார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து 2 அமலாக்கத்துறை அதிகாரிகள்மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், கர்நாடக சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அமலாக்கத்துறைக்கு எதிராக முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், உள்துறை மந்திரி பரமேஸ்வரா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இதுகுறித்து துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

சமூக நலத்துறை உதவி இயக்குநரை முதல்-மந்திரி பெயரை வாக்குமூலத்தில் அளிக்க வற்புறுத்திய அமலாக்கத்துறைக்கு எதிராக இன்று மந்திரிகள் உள்பட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சுதந்திரமான, நியாயமான விசாரணைக்கு ஒத்துழைக்க மந்திரியே ராஜினாமா செய்துள்ளார். சிறப்பு விசாரணைக் குழு ஏற்கனவே 50 சதவீத தொகையை மீட்டு பலரை கைது செய்துள்ளது.

தற்போது அமலாக்கத்துறை தலையிட்டு உதவி இயக்குநரை வற்புறுத்துகிறார்கள். என்னையும் வழக்கில் தொடர்புபடுத்த குறி வைத்துள்ளனர். என்னைப் போன்றவர்களைச் சி.பி.ஐ. துன்புறுத்துகிறது. எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டம் தன் கடமையைச் செய்யும். விசாரணையில் தலையிட விரும்பவில்லை. சட்ட சபையிலும் இதுதொடர்பாக விவாதிப்போம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *