
சென்னை:
தமிழகத்தில் டாக்டர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகப் பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.
கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை டாக்டர் பாலாஜி தாக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது, வேதனை அளிக்கக் கூடியது. தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் டாக்டர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது என்பதையே இது காட்டுகிறது.
டாக்டர்கள் அனைத்து நோயாளிகளுக்கும் பாகுபாடற்ற மனநிலையிலேயே சிகிச்சை அளிக்கிறார்கள். நோயாளியின் உறவினர்களுக்குத் தங்கள் உறவினர்கள் நோயோடு போராடுகிறார்கள் என்ற வேதனை இருக்கலாம். ஆனால் அது டாக்டர்களைத் தாக்கும் அளவிற்கு, நிலைமை மோசமாக இருக்கக் கூடாது.
டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும், நோயாளிகளின் உறவினருக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும். டாக்டர்களுக்குப் பாதுகாப்பற்ற தன்மை நிலவுகிறது என்பது வேதனை. டாக்டர் இதய நோய்க்குச் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து இருக்கிறார். அவர் பூரண குணமடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். டாக்டர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழிசை கூறி உள்ளார்.

