நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான், இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநில முதலமைச்சர்களும் ரோல் மாடலாக இருக்கிறார் என்று சாத்தூரில் நடைபெற்ற தி.மு.க.நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
2026-சட்டமன்றத் தேர்தலில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தும் வகையில், தமிழக துணை முதலமைச்சரும், கழக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி-ஸ்டாலின், அனைத்து மாவட்டங்களுக்கும் பயணம் செய்து, கழக நிர்வாகிகளைச் சந்தித்து, 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து கழக நிர்வாகிகளுடன் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், இன்று விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொண்டு, கழக நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டறிந்து, ஆலோசனைகளை வழங்கினார். அதன் பின்னர் உரையாற்றினார். அப்போது, அ.தி.மு.கவில், ஒவ்வொருநாளும் ஒவ்வொரு அணி உருவாகிறது.
இப்போது செங்கோட்டையன் அணி உருவாகியிருக்கிறது. அவர் ஹரிதுவார் போகிறேன் என்று சொல்லிவிட்டு, அமித்ஷாவைச் சந்திக்கிறார். எடப்பாடி பழனிசாமியும் நான்கு கார்களில், மாறி அமித்ஷாவைச் சந்திக்கிறார். வெளியில் வரும்போது முகத்தை மூடிக்கொண்டு வருகிறார். பத்திரிகையாளர்கள் படம் பிடித்துப் போட்டதும், முகத்தைத் துடைத்தேன் என்கிறார்.
ஏசி காரிலேயே முகம் வியர்க்கிறது என்றால், அப்படி வியர்க்கும் அளவிற்கு என்ன நடந்தது, வடிவேலு படக் காமெடியில் வருகிற பேக்கரி டீலிங் நடந்திருக்கிறது என்றும் விமர்சித்த அவர், நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான், இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும், ரோல் மாடலாக இருக்கிறார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், அமித்ஷாதான் தலைவர் என்று அ.தி.மு.க. தலைவர்களே ஒத்துக்கொள்கிறார்கள் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
