
Naam Tamilar Katchi: நாம் தமிழர் கட்சியின் பல மாவட்ட நிர்வாகிகள் சீமானின் செயல்பாட்டால் அதிருப்தி அடைந்து கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். விலகிய நிர்வாகிகள் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்த கட்சியான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகச் சீமான் இருந்து வருகிறார். தமிழகத்தில் திமுக- அதிமுகவிற்கு மாற்றாக வேகமாக வளர்ந்த கட்சியாக நாம் தமிழர் கட்சி பார்க்கப்பட்டது. ஆளுங்கட்சியான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஒவ்வொரு தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் நிலையில் உள்ளாட்சி, சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் கெத்தாகத் தனித்து தேர்தலை எதிர்கொண்டு 8 சதவிகிதம் முதல் 10 சதவிகித வாக்குகளைப் பெற்று சீமான் தமிழக அரசியலை திரும்பிப் பார்க்க வைத்தார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விவசாய சின்னம் கிடைக்காததால் சுயேட்சை சின்னமான மைக் சின்னத்தில் போட்டியிட்டு குறுகிய காலத்தில் மக்களிடம் கொண்டு சென்று 8.9 % வாக்குகளைப் பெற்றார். இந்நிலையில் சீமானின் செயல்பாட்டால் அதிருப்தி அடைந்து மாநில நிர்வாகிகள் முதல் மாவட்ட செயலாளர்கள்வரை அடுத்தடுத்து விலகி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரி மண்டல ஒருங்கிணைப்பாளர் கரு.பிரபாகரன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் சுகுமார், விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் ஆகியோர் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து விலகினர். இந்நிலையில் மத்திய மாவட்ட செயலாளரும் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் அடுத்தடுத்து மாவட்ட செயலாளர்கள் விலகி வரும் நிலையில் இவர்கள் அனைவரும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடைபெற உள்ள நிலையில், இந்த மாநாட்டில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமான மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.
விஜய் அரசியல் வருவகையால் திமுக, அதிமுக கட்சிகள் ஒரு வித பயத்துடன் இருந்து வரும் நிலையில் அதை வெளியில் காட்டி கொள்ளாமல் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய்யின் சூறாவளி அரசியல் வருவகையால் முதலில் கூடாராம் காலியாகும் கட்சி இளைஞர்களை அதிகம் வைத்து இருக்கும் நாம் தமிழர் கட்சியெனக் கூறப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் தனித்து களம் கண்டு வந்தத நாம் தமிழர் கட்சி முதல் முறையாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட தயாரெனச் சீமான் கூறிவந்தது குறிப்பித்தக்கது.



