
தஞ்சாவூரில் போலீஸ்காரர் ரஹிம், இளைஞர் ஆகாஷ் மாறி மாறி தாக்கி கொண்டனர். விசிகவினர் நடத்திய போராட்டத்தின்போது வேலைக்கு செல்ல வேண்டுமென வாக்குவாதம் செய்தபோது மோதல் ஏற்பட்டது. ஆகாஷ் ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். சம்பவத்தின்போது என்ன ஆனது, யார் மீது தவறு, இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன என்று இளைஞர் ஆகாஷ் கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் இளைஞர் ஆகாஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “எனக்கு கட்சி பற்றி எல்லாம் தெரியாது. ஆனால் அந்த கட்சிக்காரர்கள் மீது தான் தவறு. நான் அவசரமாக செல்ல வேண்டும் என்று அவர்களிடம் கேட்டேன். 2 பேர் எழுந்து வழிவிட்டனர். அவர்கள் அருகில் இருந்த ஒருவர் தான் பிரச்சனை செய்தார். உங்கள் பிரச்சனை எனக்கு தெரியாது.
என் பிரச்சனை உங்களுக்கு தெரியாது. நான் போராடி வேலை பார்த்தால் தான் எனக்கு சம்பளம். கொஞ்ச நேரம் தூங்காமல் விட்டாலும் எனக்கு வலிப்பு வந்துவிடும் என கூறினேன். மற்றொரு நிர்வாகி, பி.சி.ஆர் வழக்கில் உள்ளே தள்ளிடுவேன். என் கட்சி பேனர் வைத்தால் மட்டும் தான் உங்களை விடுவேன்.
அது ஒரு மணி நேரம் ஆனாலும் சரி. ஒரு நாள் ஆனாலும் சரி என்றார். அருகில் அரசு மருத்துவமனை உள்ளது. பலர் அவசர சிகிச்சைக்காக வந்து செல்வார்கள் என்று சொல்லியும் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அதன்பிறகு ட்ரிகர் ஆகி பிரச்சனை வெடித்தது. போலீஸ்காரர்கள் வந்து என்னை கிளம்ப சொன்னார்கள்.
மக்களுக்காக பேசுங்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என நான் கேட்டேன். அவர்கள் முதலில் அடிக்கவில்லை. சீருடையின் மதிப்பு என்ன என்று எனக்கும் தெரியும். வாயா போயா என்று பேசியது தப்பு. கை ஓங்கினார்கள். அடிடா என்று சொன்னேன் அடித்தார்கள். என்ன இருந்தாலும் அவர்கள் வயதில் மூத்தவர்.
நான் அப்படி பேசி அடித்திருக்க கூடாது. என் மீது தவறு உள்ளது. கட்சிக்காரர்களிடம் இருந்து உன்னை பாதுகாக்க தான் முயற்சித்தோம் என போலீசார் கூறினர். காவல்துறை நண்பன் என்கிற அடிப்படையில் காப்பாற்ற பார்த்தோம். அது சண்டையாகிவிட்டது என்றனர். அன்றைக்கு கட்சி தலைவரின் பிறந்தநாளுக்கு பேனர் வைத்தனர்.
சிறை சென்றபோது எனக்கு 26 வயது. நானும் ஆட்சி மாற்றத்திற்காக தவெகவுக்கு தான் வாக்களித்தேன். கூட்டணி ஆட்சியில் இருந்து கொண்டு அராஜகம் செய்கிறார்கள்.சம்பவம் நடந்தபோது எனக்கு 25 வயது. சிறை சென்ற நாள் எனக்கு பிறந்தநாள். பிறந்தநாள் பிறக்கும்போது சிறை கதவு திறக்கிறது. என் குடும்பத்தினர் நிலையை யோசித்து பாருங்கள்.
என்னுடைய குழந்தை கேக் வெட்ட காத்திருந்தார். எல்லாரும் அழுதனர். நானும் பாதிக்கப்பட்டுள்ளேன். காவல்துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருப்பதால் காவல்துறையினர் அவர்களை பகைத்து கொள்ள முடியாது. சீருடையில் உள்ள காவல்துறையினர் மக்கள் மீது கை வைக்க முயற்சித்ததும் தவறு.
என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். போலீஸ் மீதான வழக்கையும் ரத்து செய்ய வேண்டும். எனக்கு ஏற்கனவே வேலை போய்விட்டது. குடும்ப சூழ்நிலை மோசமாக உள்ளது. எனக்கு வேறு வேலை வேண்டும்”என்றார்.




