தவெக இளைஞர்களுக்கு துரோகம் செய்துவிட்டது – அன்புமணி குற்றச்சாட்டு..!

Advertisements

தவெக தேர்தல் உறுதிமொழிகளை நிறைவேற்ற மறுப்பது இளைஞர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள தொகுதி 2 மற்றும் 2ஏ பணியிடங்களை நிரப்புவதற்காக 821 பேரைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

குறைந்தது 3 ஆயிரம் பணிகளுக்கு ஆள்தேர்வு நடைபெறும் என இளைஞர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அதில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே காலியிடங்களாக அறிவிக்கப்பட்டிருப்பது அவர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.
அதன்படி அரசுத் துறைகளிலுள்ள சார்பதிவாளர், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர் உள்ளிட்ட தொகுதி 2 பணிகளுக்கு 41 பேரும், தணிக்கை ஆய்வாளர், உதவியாளர்கள், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட தொகுதி 2ஏ பணிகளுக்கு 780 பேரும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுத் துறைகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 2 மற்றும் 2ஏ பணியிடங்கள் காலியாக உள்ளதாக அரசு ஊழியர் அமைப்புகள் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார்.பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் மறைக்கப்பட்ட இடங்களையும் சேர்த்தால் காலியிடங்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் கூடுதலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இவ்வளவு பணியிடங்களை வைத்துக் கொண்டு வெறும் 821 பேரை மட்டும் தேர்ந்தெடுப்பது போதுமானதல்ல என்று குறிப்பிட்டுள்ளார். இதைவிட மோசமாக இளைஞர்களை ஏமாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார். டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பவுள்ள தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான காலியிடங்களின் எண்ணிக்கையை 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *