
மயிலாடுதுறை மாவட்டம் சாத்தங்குடியைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமியையும், அவரைக் காதலித்து வந்த பார்த்திபன் என்ற இளைஞரையும், பெண் வீட்டார் ஆணவப் படுகொலை செய்து விட்டதாகக் குற்றம் சாட்டிப் பார்த்திபனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஜூன் 30ஆம் தேதி 17 வயதான சிறுமி மற்றும் அவரைக் காதலித்து வந்த பார்த்திபன் என்ற இளைஞர் ஆகியோர் தூக்கில் தொங்கியபடி பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருந்த நிலையில், இது தொடர்பாக இறந்துபோன இளைஞனின் உறவினர்கள், பெண்ணின் வீட்டையும், அவரது உறவினர்களின் வீடுகளையும் வாகனங்களையும் அடித்து நொறுக்கினர்.
இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவான நிலையில், பெண் வீட்டார் ஆணவப் படுகொலை செய்து விட்டதாக இளைஞனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த வழக்கைக் கொலை வழக்காக மாற்ற வேண்டும் என்றும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய வேண்டும் என்றும் வலியுறுத்திச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.




