
அமெரிக்காவுடனான இடைக்கால அமைதி உடன்பாட்டைப் புதுப்பிப்பதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான தகராறு காரணமாக ஹார்முஸ் நீரிணை தொடர்ந்து மூடியே கிடக்கிறது. செவ்வாயன்று அந்த வழியாகச் சென்ற வணிகக் கப்பல்கள் தாக்கப்பட்டன. இதனால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவற்றின் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளன.
போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாக அமெரிக்கா தொடர்ந்து கூறிவந்தாலும் இதுவரை எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. அமைதிக்கான நம்பிக்கையை ஈரான் நொறுக்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதே நேரத்தில் தங்கள் துறைமுகங்கள் மீதான முற்றுகையைக் கைவிட வேண்டும் என்றும், முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது. உடன்படிக்கையின் நிபந்தனைகளைப் பின்பற்றவில்லை என்று இரு நாடுகளும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டியுள்ளன.


