
செங்கோட்டையன் கட்சியில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என வலியுறுத்தியதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் குனியமுத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மேற்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். இதை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் பேசியபோது, வருகின்ற ஒன்பதாம் தேதி மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளுக்கான நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார். அதிமுக ஒன்றிணைப்பு குறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர், செங்கோட்டையன் கட்சியில் பொதுச் செயலாளர் பதவி, முதல்வர் பதவி ஆகியவற்றையெல்லாம் கேட்கவில்லை என்றும் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என வலியுறுத்தியதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய தினகரன், அண்ணாமலை தனக்கு ஒரு நல்ல நண்பர் என்றும் அவர் தூண்டியதால் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியதாகக் கூறியது வருத்ததக்கது என்றார்.


