To Kill A Tiger: ஆஸ்கர் விருதுக்கு இந்திய ஆவணப்படம் பரிந்துரை!

Advertisements

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களின் பட்டியல் நேற்று வெளியான நிலையில் இதில் இந்தியாவின் டூ கில் ய டைகர் (To Kill a Tiger) என்ற ஆவணப்படம் இடம் பெற்றுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரைப்பட உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது (Oscar Awards 2024) வரும் மார்ச் மாதம் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் இந்த விழாவிற்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

உலகம் முழுவதும் இருந்து 591 படங்கள் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் இதில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஓபன்ஹைமர், பார்பி உள்ளிட்ட படங்கள் பெரும்பாலான பிரிவுகளில் இடம் பெற்றுள்ளது. மொத்தம் 24 பிரிவுகளில் இந்த ஆஸ்கர் விருதானது வழங்கப்படும்.

இந்த ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் சிறந்த ஆவணப்பட பிரிவில் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட டூ கில் ய டைகர் (To Kill a Tiger)  என்ற படம் இடம் பெற்றுள்ளது. கடந்தாண்டு ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் மற்றும் ஆவணப்படமான தி எலிஃபண்ட் விஸ்பெரர்ஸ் ஆகிய 2 படங்களும் ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ந்தது. இந்நிலையில் டூ கில் ய டைகர் (To Kill a Tiger)  படமும் ஆஸ்கர் விருதை வெல்ல வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இந்த படத்தை டெல்லியைச் சேர்ந்த நிஷா பஹுஜா என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் தனது 13 வயது மகள் 3 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை எதிர்த்து ரஞ்சித் என்ற தந்தை நடத்தும் சட்ட போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தை கார்னிலியா பிரின்சிப் மற்றும் டேவிட் ஓபன்ஹெய்ம் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

டூ கில் ய டைகர் படம் சேலம் திரைப்பட விழா, Siff திரைப்பட விழா, நியூயார்க் இந்தியன் திரைப்பட விழா, Stuttgart இந்திய திரைப்பட விழா, மம்மூத் திரைப்பட விழா, Docaviv விழா, டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட 16 திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்துள்ளது. இதன் ட்ரெய்லரை பார்க்கும்போதே மனதை பதைபதைக்க செய்யும் ஒரு கதை என்பது நமக்கு விளங்குகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *