TN fishermen:மத்திய அரசு அழுத்தம்… 37 தமிழக மீனவர்கள் விடுதலை!

Advertisements

தமிழக மீனவர்கள் 37 பேரை விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை:நாகை, மயிலாடுதுறை துறைமுகங்களிலிருந்து 3 விசைப்படகுகளில் கடந்த மாதம் 21-ம் தேதி 37 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி சிறைபிடித்தனர்.

மேலும் மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இலங்கைக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகளை வலியுறுத்தினார்.

இந்த நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட மயிலாடுதுறை மீனவர்கள் 37 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மீனவர்கள் பயன்படுத்திய 3 விசைப்படகுகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள் இந்திய துணை தூதரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதனால் மீனவர்கள் அனைவரும் விரைவில் தமிழகம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *