கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நெல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவை தொடக்கம்..!
கடந்த இரு தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18-ஆம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. அதிகனமழையால் தென் மாவட்டங்களில் உள்ள அனைத்து ஆறுகளும் நிறைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், திருநெல்வேலி, தூத்துக்குடி நகர், கிராமப்புறங்களில் மழை வெள்ள நீர் புகுந்தது.
கடந்த இரு தினங்களாக குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் ஆறுகள் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் கனமழை பெய்ததால் பேருந்து முதல் அனைத்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. குறிப்பாக ரயில் மற்றும் விமான சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டது.
குறிப்பாக நெல்லை ரெயில் நிலையத்தை சுற்றி முழுவதுமாக வெள்ள நீர் சூழ்ந்தது. இதன் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அங்கு ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வெள்ள நீர் வடிந்ததால் நெல்லை ரயில் நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
அதன்படி வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட சில ரயில் சேவைகளை தவிர மற்ற ரயில் போக்குவரத்து இன்று முதல் தொடங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. முழுவதுமாக இயக்கப்படவில்லை என்றாலும் சிறிது சிறிதாக இயக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

