
அமெரிக்காவில் டிக் டாக் செயலி மீண்டும் செயல்படும் ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட உள்ளார்.
டிக் டாக் செயலி உலகளவில் பிரபலமாக உள்ள நிலையில் அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்தச் செயலியை பயன்படுத்தி வந்தனர். இந்தச் செயலிக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் அரசு தடை விதித்தது. அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை கடந்த ஜனவரி மாதம் முதல் அமலில் உள்ளது.
ஆனால் டிக்டாக் செயலிக்கு வழங்கப்பட்ட கெடுவை தற்போது வரை அதிபர் டிரம்ப் தொடர்ந்து நீட்டிப்பு செய்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்காவில் டிக் டாக் செயலி மீண்டும் செயல்படும் ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளார். இதனையடுத்து, டிக் டாக் செயலியின் பெரும்பாலான கட்டுப்பாட்டை அமெரிக்கா கையகப்படுத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
டிக்டாக், கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் வெற்றிபெற உதவியதாக டிரம்ப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.



