
நடத்தையில் சந்தேகப்பட்டு காதல் மனைவியைக் கொல்ல முயன்றவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்புவழங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டம் இத்தலார் பகுதியைச் சேர்ந்தவர் மணி என்ற மணிகண்டன். இவர் 2011 ஆம் ஆண்டு அன்னபூரணி என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் அவர்கள் கோவை சாய்பாபா காலனி பகுதியில் வசித்து வந்தனர். இதை அடுத்து அன்னபூரணி அங்குள்ள ஒரு மளிகை கடைக்கு வேலைக்குச் சென்று வந்தார்.
இதனால் மணிகண்டனுக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. மேலும் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் அன்னபூரணி கணவரைப் பிரிந்து வேறு பகுதியில் வசித்தார். இதற்கிடையே கடந்த 2016″ஆம் ஆண்டு மணிகண்டன் அன்னபூரணி வசிக்கும் பகுதிக்குச் சென்று அவரிடம் தகராறு செய்துள்ளார்.
பின்னர் ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது மனைவியைத் தாக்கிக் கொலை செய்ய முயன்றார்.
இதில் படுகாயம் அடைந்த அன்னபூரணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். இதுகுறித்து சாய்பாபா காலனி காவல்துறையினர் கொலை முயற்சி என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து மணிகண்டன் கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவையில் உள்ள மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும் 500 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி வேதகிரி உத்தரவிட்டார்.

