
தமிழ் சினிமாவில் நடிக்காதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார்.
சமந்தா நடிப்பில் கடைசியாக 2022-ல் வெளியான தமிழ் படம் ‘காத்து வாக்குல 2 காதல்’. 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் எந்தத் தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை. அண்மையில் ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ இணையத் தொடரில் நடித்தார்.
இந்நிலையில் அவர் அண்மையில் அளித்த பேட்டியில் அவரிடம் தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்ப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த சமந்தா, “பல படங்களில் நடிப்பது எளிமையானது.
இது என்னுடைய கடைசி படம் என்று என்னை யோசிக்க வைக்கும் அளவுக்கான படங்களில் நடிக்கும் கட்டத்தில் நான் இருக்கிறேன் என நினைக்கிறேன். அப்படியான ஒரு தாக்கத்தை அந்தப் படங்கள் தர வேண்டும்.
இதை நான் 100 சதவீதம் நம்பவில்லை என்றால் நான் அந்தப் படங்களில் நடிக்கமாட்டேன். நடிகராக எனக்குச் சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். எனக்கு மனநிறைவு தராத படங்களை நான் ஒருபோதும் தேர்வு செய்வது கிடையாது” என்றார்.



