
பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலி!
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் வாணவெடி தயாரிக்கும் இடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். வாணவெடி தயாரிக்கும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வெடி விபத்துகுறித்து பொறையார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி கிராமத்தில் அரசு உரிமம் பெற்ற பட்டாசு குடோன் உள்ளது. இந்தப் பட்டாசு குடோனில் பணியாளர்கள் தினமும் வேலை செய்து வந்தனர். இன்று மாலையில் பலர் பட்டாசு குடோனில் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த வேளையில் பட்டாசு குடோனில் இன்று திடீரென்று பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பதறியடித்து கொண்டு குடோனுக்கு ஓடிவந்தனர். அப்போது குடோன் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து உடனடியாகத் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர், போலீசார் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு குடோனில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. மேலும் பலர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடினார்கள். அவர்கள் மீட்கப்பட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மயிலாடுதுறை அருகே பட்டாசு தயாரிக்கும் இடத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் 4 பேர் உடல் சிதறி பலியான சம்பவம் அங்குப் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


