
தாய் யானையின் அரவணைப்பில் அதன் துதிக்கைக்குள் குட்டி யானை ஓன்று படுத்துத் தூங்கிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாய் யானையைப் பிரிந்து குட்டி யானை ஒன்று தனியாகச் சுற்றித்திரிந்தது. வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு தாய் யானை இருந்த கூட்டத்துடன் விட்டனர். மேலும் டிரோன் மூலமாகக் குட்டி யானையைக் கண்காணித்து வந்தனர். தாய் யானையுடன் குட்டி யானை நடமாடிக் கொண்டிருந்தது.
இந்தக் குட்டி யானையைச் சமீபத்தில் வனத்துறையினர் கண்காணித்தபோது பன்னிமேடு எஸ்டேட் 2-வது பிரிவுத் தேயிலை தோட்ட பகுதிக்கு அருகில் அலவாங்கு மேடு என்ற இடத்தில் தாய் யானையுடன் சிறிதுநேரம் விளையாடிக் கொண்டு இருந்தது. பின்னர் தாய் யானை வனப்பகுதியில் உள்ள பாறையின் அருகே படுத்துக்கொண்டது. அப்போது தாய் யானையின் அரவணைப்பில் அதன் துதிக்கைக்குள் அந்தக் குட்டி யானை படுத்துத் தூங்கியது.
பிரிந்து சென்ற குட்டி யானையைத் தாயுடன் சேர்க்கும்போது சில தாய் யானைகள் குட்டியைச் சேர்க்காது. ஆனால் இந்தத் தாய் யானை ஒன்றாகச் சேர்ந்து சுற்றித்திரிவதும், ஒன்றோடு ஒன்று படுத்து உறங்குவதுமாக உள்ளது. இதுதொடர்பான புகைப்படம் வைரலாகிவருகிறது.


