ஈராக்கில் உயிரிழந்த நத்தத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியின் உடல் 38 நாட்களுக்குப் பின் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டது. சோகத்தில் மூழ்கிய கிராமம்…
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையா வயது 45, கூலி தொழிலாளியான இவருக்குத் திருமணம் ஆகி கோகிலா என்ற மனைவியும் மாரிச்செல்வம் (14), கவிவரதன் (11), பிரநிஷா (5) என மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஈராக் நாட்டில் கம்பி கட்டும் வேலைக்காகச் சென்று இருந்தார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 1 தேதி ஈராக் நாட்டில் சின்னையா தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி கோகிலாவிற்கு தகவல் வந்தது. அதையடுத்து தனது கணவர் உடலை ஈராக் நாட்டிலிருந்து மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என நத்தம் தாசில்தார் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரிடம் மூன்று முறை கோகிலா தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கண்ணீர் மல்க மனு அளித்தார்.
மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி இது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளதாகவும் விரைந்து நடவடிக்கை எடுத்து உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே இறந்த சின்னையா தான் இறப்பதற்கு முன் தனது மனைவி மற்றும் உறவினர்களுக்கு அவர் பேசிய காணொளியை அனுப்பி உள்ளார். அதில் தான் இறப்புக்கு காரணமானவர்கள் பெயர்களைக் குறிப்பிட்டு வேண்டுமென்றே திட்டமிட்டு வாட்ஸ் அப்மூலம் அவதூறான சில விஷயங்களைப் பரப்பி விட்டதாகவும் அதன் காரணமாகத் தன்னால் வாழ இயல முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சின்னையா உயிரிழந்து 38 நாட்கள் ஆன நிலையில் இந்தியா தூதரக முயற்சியில் சின்னையாவின் உடல் விமானம்மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு அங்கிருந்து அமரர் ஊர்திமூலம் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. கணவரின் உடலைக் கண்ட மனைவி கோகிலா கதறி அழுதபடி மயக்கம் அடைந்தார். பிழைப்புத் தேடி வெளிநாடு சென்று அங்கே சின்னையா உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

