பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாருக்குப் புரட்சி வணக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். பல தலைமுறைகள் ஆதிக்கத்துக்குப் பணிந்ததாகவும், ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டததாகவும், பல தலைமுறைகள் அதன் மாற்றத்தைக் காண்கின்றதாகவும் தெரிவித்துள்ளார். ஆனாலும், ஆதிக்கம் இன்னும் முற்றாக அகலவில்லை, அதனை அடையாளம் காண வேண்டியது வரும் தலைமுறைகளின் பொறுப்பும்கூட எனக் கூறியுள்ளார்.
வெளிச்சமற்ற இடம் இருள், கேள்விகளற்ற சமூகம் அதைவிடப் பேரிருள் என்று தெரிவித்துள்ளார். “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது என்றும், பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


