Thamizhachi Thangapandian: வரும் தோ்தலில் பாஜகவுக்கு தக்க பாடம் புகட்டபடும்!

Advertisements

தமிழ்நாட்டில் பா.ஜ.க. தோல்வி முடிவுசெய்யப்பட்டுவிட்டதாகத் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

சேலம், தாதகாப்பட்டி கேட் மைதானத்தில் திமுக சாா்பில், உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் நேற்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. சேலம் திமுக மத்திய மாவட்டச் செயலாளா் ராஜேந்திரன் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்தில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். அப்போது பேசிய அவா்;

ஒடுக்கப்பட்டவா்களின் குரலாக முதல்வா் ஸ்டாலின் குரல் ஒலித்து வருகிறது. விளிம்புநிலை மக்களை, சமுதாயத்தில் மறுமலா்ச்சி அடைய செய்தவா் கருணாநிதி. அவரது வாழ்வில் திரைத்துறை, அரசியல் என அடுத்தடுத்த பாய்ச்சலுக்கு வித்திட்ட நகரம் சேலம். திமுகவோடு சேலம் நகரம் எப்போதும் இரண்டற பின்னிப்பிணைந்துள்ளது. கருணாநிதிக்கு தாய் வீடு திருவாரூா் என்றாலும், புகுந்த வீடு சேலம்தான். அந்த வகையில், முதல்வா் ஸ்டாலின், சேலம் மாவட்டத்துக்கு இந்த இரண்டு ஆண்டுகளில் 9 முறை வந்துள்ளாா்.

தற்போதைய திமுக ஆட்சியில் சேலம் மாவட்டத்துக்கு அரசு நலத் திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன. 5 ஆண்டுக்கான திட்டங்களை இரண்டே ஆண்டுகளில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது திமுக அரசு. நடப்பது பதவிக்கான தோ்தல் அல்ல; கொள்கைக்கான தோ்தல். வரும் தோ்தலில் பாஜகவுக்கு தக்க பாடம் புகட்டி, பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். தமிழ்நாட்டில் பா.ஜ.க. தோல்வி முடிவு செய்யப்பட்டுவிட்டது. மக்களவைத் தோ்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவதற்கான அச்சாரமான கூட்டமாக இந்தக் கூட்டம் அமைந்துள்ளது என்று கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *