
‘தளபதி 69’ படத்தினை இயக்குனர் எச்.வினோத் இயக்க உள்ளார்.
சென்னை:நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 5-ம் தேதி வெளியாகி வெற்றி நடைபோட்டு வரும் படம் ‘தி கோட்’. இப்படம் விஜய்யின் 68-வது படமாகும். இப்படத்தை தொடர்ந்து, அவர் தனது 69-வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 69’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும். அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார்.
‘தளபதி 69’ படத்தை அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு’ ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்க உள்ளார். மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், மோகன்லால், சமந்தா, சிம்ரன், மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்த நிலையில், எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள கடைசி திரைப்படம்குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் எனக் கே.வி.என் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. மேலும் இது முழுக்க முழுக்க கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாகத் தயராக உள்ளது.
தற்போது, ‘தளபதி 69’ படத்திற்காக விஜய் ரூ. 275 கோடி சம்பளம் வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. விஜய் இப்படத்திற்காக ரூ. 275 கோடி சம்பளத்துடன் அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர் என்ற பெருமையைப் பெற உள்ளார்.இப்படம் விஜய்யின் கடைசி படம் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

