
மரங்களை வெட்டிக் கடத்திய பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் !
பள்ளி வளாகத்திலிருந்த தேக்குமரங்களை வெட்டிக் கடத்திய பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் நகரின் மையப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட தேக்குமரங்கள் வளர்ந்திருந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென 18 தேக்கு மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டிருந்தன. இதன் மதிப்பு பல லட்சங்கள் பெறும் எனச் சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் வட்டார கல்வி அலுவலர் சித்ராவிடம் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு ஆலங்காயம் போலீசில் புகார் அளித்தார். அதன்மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இந்தத் தேக்கு மரம் வெட்டிக் கடத்தப்பட்ட சம்பவத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் துரை மற்றும் அப்பகுதி பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ஒருவரும் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் துரை மீது ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பள்ளி தலைமை ஆசிரியர் துரையை சஸ்பெண்ட் செய்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.

