
தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிரத் திருத்தத்துக்குப் பின் 2026 சனவரி முதல் நாளைத் தகுதிநாளாகக் கொண்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் இறந்தவர்கள், வேறு இடங்களுக்குச் சென்றவர்கள், இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள், முகவரி தெரியாதவர்கள் எனத் தொண்ணூ இலட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன.
அதன்பின் சிறப்புத் தீவிரத் திருத்தத்துக்குப் பிந்தைய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லாதவர்கள் உரிய ஆவணங்களுடன் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. தேவையான திருத்தங்களைச் செய்துகொள்ளவும் வாய்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 2026 சனவரி முதல் நாளைத் தகுதி நாளாகக் கொண்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டத் தேர்தல் அதிகாரிகளான ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.
அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பெயர் உள்ளதா? என்பதைத் தேர்தல் ஆணையத்தின் தளத்திலும் செயலி வாயிலாகவும் சரிபார்த்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


