
ஆதிதிராவிட பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார, கல்வி வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொழில்முனைவோர்களாக, வெளிநாட்டுக்குச் சென்று உயர்கல்வி கற்க, குடியிருப்புகள் மேம்பட, நிலவுரிமை பெற எனப் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவற்றால் ஏற்பட்டுள்ள விளைச்சலின் முழுத் தாக்கம் வெளிப்படும்போது வியப்பு மேலிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்களுக்குப் பட்டா வழங்கக் கூடாது என்றும், இரண்டாயிரமாவது ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதிக்குப் பிறகு வழங்கிய பட்டாக்களை ரத்துச் செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் திமுக அரசு நாடகமாடுவதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, சேலம், திருச்சி, வேலூர் என பெரிய மாநகரங்கள் அமைந்துள்ள மாவட்டங்கள் அனைத்திலும், நீர்நிலைகளை ஆக்கிரமித்திருப்பவர்களுக்கும், திமுகவினருக்கும் பட்டா வழங்க, திமுக அரசு ஆணை வெளியிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். நீர்நிலைகளுக்குப் பட்டா வழங்கக் கூடாது என்றும், 2000 ஜனவரி ஒன்றாம் தேதிக்குப் பிறகு வழங்கப்பட்ட பட்டா அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மீறித் திமுக அரசு ஆணை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு மழைக்காலத்திலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், மாநகரங்கள், விவசாய நிலங்கள் வெள்ளக்காடாக மாறுவதற்கு முக்கியக் காரணம், இயற்கையான வடிகால்களான நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்திருப்பதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தை வாழத் தகுதியற்ற மாநிலமாக மாற்றித் தமிழக மக்கள், விவசாயிகள் வாழ்க்கையை அழிக்க வழிகோலும் இந்த அரசாணைகளைத் திமுக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.


