
CV Shanmugam Nayanthara Controversy : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்கள் கனவை சொல்லுங்கள் என கூறுகிறார், நடிகை நயன்தாரா வேண்டும் என சொன்னால், முதலமைச்சர் நிறைவேற்றி வைப்பாரா என, விழுப்புரத்தில் தி.மு.க.அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் , நடிகை நயன்தாரா குறித்து மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் சர்ச்சையாக பேசிய நிலையில், அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், சி.வி.சண்முகம் அவரது பேச்சுக்கும், செயலுக்கும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்க தவறிய, தி.மு.க. அரசை கண்டித்து, விழுப்புரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில், அ.தி.மு.க.சார்பில், முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, தி.மு.க.அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் உரையாற்றினார்.
அப்போது, அராஜக தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்ப இறுதி வாய்ப்பு என்றும், இந்த ஆட்சியாளர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்றும், தமிழ்நாட்டு மக்களின் வளங்களை கொள்ளையடித்துள்ள திமுக அரசு, அதற்கு பொறுப்பான முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட அத்தனை பேரையும், புழல் சிறைக்கு அனுப்பும் நாள் ஏப்ரல் 23-ஆம் தேதி என்றும், பா.ஜ.க.வினரிடம் கூறி, உள்துறை செயலாளரை மாற்ற வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
இந்நிலையில் , சி.வி.சண்முகம் தற்போது, “விழுப்புரத்தில் நடைபெற்ற திமுகவின் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வழக்குகள், போதைப் பொருள் பிரச்சினைகள் குறித்து கண்டனப் போராட்டத்தின் போது, ‘ஸ்டாலினின் கனவு கூறுங்கள்’ என்ற ஏமாற்று வேலை குறித்து உரையாற்றிக் கொண்டிருந்தபோது, தவறுதலாக நயன்தாராவின் பெயர் உச்சரிக்கப்பட்டது. அதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன். அந்த வார்த்தை முற்றிலும் தவறுதலாகவே பயன்படுத்தப்பட்டது. எந்தவிதமான நோக்கத்துடனும் கூறப்படவில்லை. இதனால் ஏற்பட்ட தவறுக்கு மனமார்ந்த வருத்தம்” என்றார்.


