Tamilisai Soundararajan: பெண்களின் கையில் பொருளாதாரம்!

Advertisements

கொரோனா காலகட்டத்தில் ஆண்கள் குடும்பத்தைக் காப்பாற்றினார்ளோ இல்லையோ பெண்கள் இணையதளம் வாயிலாகப் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து குடும்பங்களைக் காப்பாற்றினர் எனப் புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

ஈரோடு: ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் தனியார் அமைப்பின் சார்பில் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகத் தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்த போதிலும் பெண்களுக்கான இந்நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இதில் கலந்து கொண்டுள்ளேன். பெண்களுக்குப் பொருளாதாரத்தில் சுதந்திரம் கிடைத்துவிட்டால் அனைத்திலும் சுதந்திரம் கிடைத்துவிடும்.

பெண்கள் தனக்காகக் கவலைப்படுவதில்லை. தங்கள் குடும்பத்திற்காகத் தான் கவலைப்படுகின்றனர். ஒரு ஆண் எத்தனை வயது ஆனாலும் ஆணாகவே இருக்கின்றார். உங்கள் வெளி தோற்றத்தை வைத்துப் பல விமர்சனங்கள் இருந்தாலும் நம் உள்ளே இருக்கும் இரும்பு மனதில் இந்த நாட்டிற்காகச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களை இரும்பு பெண்மணியாக மாற்றும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

வன்முறை என்பது எந்தச் சமுதாயத்தில் இருந்தாலும் அது தவறு. 10 நபர்களுக்குக் கடனுதவி வழங்கினால் அதில் 3 பேர் பெண்களாக இருக்க வேண்டும். அதில் எஸ்.சி, எஸ்.டி சமூகத்தைச் சேர்ந்தவர் இருக்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வங்கியில் பெற்ற கடனைச் சரியான முறையில் திருப்பிச் செலுத்தியவர்கள் சுய உதவி குழுவைச் சேர்ந்த பெண்களே. அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

பெண்களின் தேவையை அறிந்து அரசு அவர்களுக்கு முன் உரிமை கொடுத்துப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இணையதளங்களில் பெண்கள் செய்யும் வணிகம் அதிக அளவில் இடம்பெறுகின்றது. கொரோனா காலகட்டத்தில் ஆண்கள் குடும்பத்தைக் காப்பாற்றினார்ளோ இல்லையோ பெண்கள் இணையதளம் வாயிலாகப் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து குடும்பங்களைக் காப்பாற்றினர்.

பெண்கள் தற்பொழுது தொழில் முனைவோராக மாறி வருகின்றனர். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதியாக இருக்கும். இதில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் வர வேண்டும். சிறிய அளவில் தொடங்கி பெரிய தொழில் முனைவோராக மாற வேண்டும். பெண்களின் கையில் பொருளாதாரம் இருந்தால் வாழ்வாதாரம் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *