
விஜய் அரசியலில் நுழைந்துள்ள நிலையில் நடிகர் சூர்யாவும் விரைவில் அரசியலில் களம் காண உள்ளதாகத் தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.
தமிழ்நாட்டில் சினிமாவையும் அரசியலையும் பிரிக்கவே முடியாது. அது ஒரு காதல் கதையாக அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து வருகிறது. தமிழ்நாட்டை ஆண்ட பெரும்பாலான அரசியல் தலைவர்கள் சினிமாவிலிருந்து வந்தவர்கள் தான். எம்.ஜி.ஆர்., கலைஞர், தொடங்கி ஜெயலலிதா, உதயநிதியென இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. அரசியல் ஆசை எப்போது யாருக்கு வரும் என்றே சொல்ல முடியாது. ஆரம்பத்தில் அரசியலா என்று பின்வாங்கியவர்கள் இன்று அதில் இறங்கி ஆட்சி செய்து வருகின்றனர்.
உதாரணத்திற்கு தற்போது தமிழக அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், சினிமாவில் நடிக்க வந்த புதிதில் கொடுத்த பேட்டிகளில் கண்டிப்பாக நான் அரசியலுக்கு வரவே மாட்டேன் எனப் பேசி இருப்பார். ஆனால் இன்று அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று அமைச்சராக இருக்கிறார். அரசியலுக்காகத் தன் சினிமா வாழ்க்கையையே தியாகம் செய்துவிட்டார் உதயநிதி.
உதயநிதியை போல் நடிகர் விஜய்யும் ஒரு காலத்தில், நானெல்லாம் அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று பேசி வந்தார். இன்று அரசியல் கட்சியைத் தொடங்கி ஜம்முனு வருகின்ற 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்து உள்ளார். இப்படி அரசியல் ஒரு மாய வலையாகவே இருந்து வருகிறது. யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அதன் மீது ஆசை வரும்.
அப்படி தான் நடிகர் சூர்யாவுக்கும் அரசியல் ஆசை துளிர்விட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் சூர்யா, அகரம் என்கிற அறக்கட்டளையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அதன்மூலம் ஏராளமான ஏழை மாணவ மாணவிகள் இன்று படித்து வருகின்றனர். இதுதவிர சூர்யாவின் ரசிகர் மன்றத்தின் சார்பிலும் ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்து ஆலோசனை நடத்தும் சூர்யாவிடம், விஜய் தங்கள் ரசிகர்களை அனுமதித்தது போல் தாங்களும் தங்கள் ரசிகர் மன்றத்தினரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்களாம். குறிப்பாகக் கிராமப்புறங்களில் உள்ள நமது இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்றால் வருகிற ஊராட்சிமன்ற தேர்தலில் நமது நிர்வாகிகள் களமிறங்க வேண்டும் என்றும் அதற்கு அனுமதி அளிக்குமாறும் நிர்வாகி ஒருவர் வலியுறுத்தினாராம்.
அரசியல் என வந்துவிட்டால் தேவையில்லாத பிரச்சனைகள் வரும் எனச் சூர்யா யோசிக்க, அதையெல்லாம் பற்றிக் கவலைப்படாதீங்க, இப்போதைக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம், உங்கள் புகைப்படத்தைப் பயன்படுத்தி தேர்தலில் நிற்க மட்டும் அனுமதி கொடுங்கள் எனக் கேட்டிருக்கின்றான்ர். பின்னர் தனது நெருங்கிய வட்டாரம் சிலரிடம் கலந்து ஆலோசித்துவிட்டு சூர்யா ஓகே சொன்னதாகக் கூறப்படுகிறது. அதற்கான அறிவுறுத்தல்களையும் அவர் பொதுவெளியில் விரைவில் வெளியிட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

