
கடையநல்லூர் அருகே கல்லூரி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி மாணவன் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கம்பனேரி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் முருகன்.இவரது மகன் வயது 20 கடையநல்லூர் அரசுக் கலை அறிவியல் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் இன்று காலை வீட்டில் உள்ள ஆடு மாடுகளுக்கு அருகில் உள்ள தன்னுடைய தோட்டத்திற்கு சென்று புல் அறுத்துவிட்டு புல் கட்டை தலையில் சுமந்தவாறு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தால் துருப்பிடித்திருந்த உயர் அழுத்த மின் கம்பி வயல்வெளியில் அருந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. அதில் எதிர்பாரா விதமாக மின் கம்பியில் மதன் மிதித்ததில், அவர்மீது மின்சாரம் பாய்ந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
இந்தத் தகவல் அறிந்து கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கிருஷ்ணமுரளி இறந்த கல்லூரி மாணவன் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாகவும் அவர் தெரிவித்தார். உடன் பொய்கை மாரியப்பன் வசந்தமுத்துபாண்டியன் பெரியதுரை உள்பட கட்சியினர் உடன் சென்றனர்.


