
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்து வருவதாகப் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும் பயங்கரவாதிகளைத் தேடும் பணி அப்பகுதியில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து, பயங்கரவாதிகள் ஊடுருவலை முறியடித்துள்ளனர். இதற்கிடையே அம்ரோஹி, தங்தார் ஆகிய பகுதியில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது இரண்டு கைத்துப்பாக்கிகள், வெடிமருந்துகள் ஆகியவை மீட்கப்பட்டன.
பாரமுல்லா தொகுதியில் மே 20ம் தேதி லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இதனால் காஷ்மீரில் குப்வாரா மற்றும் பாரமுல்லா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



