
கனடா பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்பான புகலிடத்தைக் கொடுத்திருக்கிறது என்று இந்தியா-கனடா இடையேயான மோதல் போக்குகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி குற்றம்சாட்டியுள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருவதாகவும் ட்ரூடோவின் கருத்துகளால் தான் ஆச்சரியப்படவில்லை என்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர்அலி சப்ரி கூறியிருக்கிறார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அலி சப்ரி, “பயங்கரவாதிகளில் சிலர் கனடாவில் பாதுகாப்பான புகலிடத்தைக் கண்டுபிடித்துள்ளனர். கனடா பிரதமர் எந்தவித ஆதாரமும் இல்லாமல் சில மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.” என்றார்.
மேலும், “இது இலங்கைக்கு அவர்கள் செய்த அதே காரியம்” என்ற அவர், இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாகச் சொல்வது ஒரு பயங்கரமான, முழுப் பொய் எனவும் இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் குறிப்பிட்டார்.
இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே ஜூன் 18 அன்று கொல்லப்பட்டார். செப்டம்பர் 18ஆம் தேதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை சுட்டுக் கொன்றதில் இந்தியா ஈடுபட்டதாகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.
இந்தியா கனடா பிரதமரின் குற்றச்சாட்டுகள் அபத்தமானது என்று கூறி நிராகரித்தது. இரு நாடுகளும் தங்கள் நாட்டிலிருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தவிட்டன. இதன் எதிரொலியாக இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.


