
எடப்பாடி பழனிச்சாமி கைக்காட்டுபவரே பிரதமராக வேண்டும் எனத் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் சத்ரு சம்ஹார பூஜை மற்றும் யாகம் நடத்தி வழிபாடு நடத்திய பின் தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தெரிவித்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி சத்ரு சம்ஹார பூஜை மற்றும் சிறப்பு யாகம் நடத்தி வழிப்பட்டார்.இதனையடுத்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்ததாவது.தீய சக்திகள் அழிந்து எடப்பாடி பழனிச்சாமி கைக்காட்டுபவரே டெல்லியில் பிரதமராக வேண்டும் எனத் திருச்செந்தூர் கோயிலில் சத்ரு சம்ஹார பூஜை செய்து வழிபாடு நடத்தினேன்.
வெள்ளத்திற்கு பிறகு தூத்துக்குடி தொகுதி மக்கள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. வியாபாரிகள், உப்பளத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் அதிக அளவு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது தூத்துக்குடி, ஏரல், திருச்செந்தூர் ஆகிய பகுதிகள் தான்.மக்கள் இயல்புநிலை திரும்புவதற்கு ஐந்தாண்டுகள் ஆகும். சொத்து வரி, மின்சார கட்டணம் ஆகியவற்றில் எந்தச் சலுகைகள் வழங்கவில்லை. அனிதா ராதாகிருஷ்ணன் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்று அமைச்சராகி உள்ளார்.
திருச்செந்தூர் கோயிலில் கடந்த ஆட்சியில் இருந்த அடிப்படை வசதி கூடத் தற்போது இல்லை. ஜெயலலிதா போட்ட பிச்சையில் அனிதா ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்து பின்னர் கட்சி தாவினார்.அவர் அணிந்திருக்கும் சட்டை, உடம்பில் ஓடும் ரத்தம் எல்லாம் அதிமுக உடையது.ஆனால் அவர் நன்றி கேட்டுப் பேசி வருகிறார்.
இந்தத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவதே எங்களுடைய இலக்கு.பாஜக கூட்டணியில் அதிமுக சேர வேண்டும் எனக் காத்திருந்து எதிர்பார்த்தனர். அதுவரை டி.டி.வி. தினகரனை எந்த ஒரு பாஜக மேடையிலும் ஏற்றவில்லை. ஜெயலலிதா இடத்தை யாராலும் பிடிக்க முடியாது இவ்வாறு சிவசாமி வேலுமணி தெரிவித்தார்.


