
காலை, மாலை வித்தியாசம் தெரியாது: ராகுல் அலுவலகத்தை கிண்டல் செய்த பிரணாப் முகர்ஜி.
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்தா முகர்ஜி எழுதிய புத்தகம் பிரணாப் மை பாதர். இந்தப் புத்தகத்தில் ஷர்மிதா தனது தந்தையின் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். அதில் 2013-ம் ஆண்டு எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் சிறை தண்டனை பெற்றால் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிராக 3 மாதம் அவகாசம் வழங்கும் அவசர சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது.
அந்த மசோதாவை கிழித்தெறிந்த ராகுல் காந்தி, அவகாசம் வழங்குவது முழு முட்டாள்தனம் என்று விமர்சனம் செய்தார். அப்போது மன்மோகன்சிங் அரசின் அமைச்சராக இருந்த எனது தந்தை பிரணாப் முகர்ஜி மிகவும் கோபம் அடைந்தார்.

எனது தந்தைக்கும், ராகுலுக்கும் இடையே உரிய சந்திப்பு நடக்கவில்லை. அதில் பல குழப்பங்கள் இருந்தன. சந்திப்பு பற்றி அடிக்கடி மறந்து விடுவதும் ஒரு காரணமாக அமைந்தது. இதனால் கட்சியை, நாட்டை ராகுல் வழிநடத்தும் திறன் குறித்து எனது தந்தை அப்போது நம்பிக்கை இழந்தார்.
ஒருநாள் முகல் கார்டனில் எனது தந்தையின் வழக்கமான காலை நடைபயிற்சியின் போது அவரைப் பார்க்க ராகுல் வந்தார். காலை நடைபயிற்சி மற்றும் பூஜையின் போது எந்த இடையூறும் ஏற்படுவதை எனது தந்தை விரும்ப மாட்டார். இருப்பினும், அவரைச் சந்திக்க முடிவு செய்தார். அதன்பின்தான் ராகுல் உண்மையில் எனது தந்தையை மாலையில் சந்திக்கத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. ஆனால் ராகுலின் அலுவலகம் தவறுதலாக சந்திப்பு காலை என்று அவருக்குத் தெரிவித்தது.
இதுகுறித்து பின்னர் நான் அறிந்தேன். நான் கேட்டபோது எனது தந்தை, ராகுலின் அலுவலகத்திற்கு காலை, மாலை என்பதையே வேறுபடுத்திப் பார்க்க தெரியவில்லை. இப்படி இருந்தால் அவர்கள் எப்படி ஒருநாள் பிரதமர் அலுவலகத்தை இயக்குவார்கள் என கேலியாக கேட்டார் என தெரிவித்துள்ளார்.


